பெரிய நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் ‘சி’ நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.

அந்த நெல்லியை வைத்து ரிலாக்ஸ் டைமில் இந்த அல்வா செய்து சாப்பிடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

செய்முறை

  • 200 கிராம் பெரிய நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து ஆறவைக்கவும்.
  • பிறகு, கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த நெல்லிக்காய் விழுது, 250 கிராம் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். 
  • இடையிடையே சிறிதளவு நெய் சேர்க்கவும்.
  • 15 நிமிடங்கள் கைவிடாமல் கிளறிய பிறகு கலவை தளதளவென்று வரும் பக்குவத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • கலவையை கரண்டியில் எடுத்தால் பிசுபிசுப்புத்தன்மை இல்லாத பக்குவம் வரும் வரை கிளறவும்.
  • இடையிடையே சிறிதளவு நெய், ஆறு பாதாம் பருப்புகள், இரண்டு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும்.
  • அதே பாத்திரத்தில் வைத்தால் கெட்டிப்படும்.
  • நெல்லிக்காய் அல்வா ரெடி.

சிறப்பு

நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே