மகாராஷ்டிராவில் CAA, NPRயை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்கரே

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய மக்கள்தொகை பதிவேடும் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்தும் பிரதமருடன் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு யாரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிடாது என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்ஆர்சி-யை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மோடி தெளிவுபடுத்தியிருப்பதாகவும் உத்தவ் தாக்கரே கூறினார். 

மகாராஷ்டிர ஆளுங் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சிஏஏ, என்பிஆரை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரே அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் ஆளுங்கூட்டணியில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால் கூட்டணிக் கட்சிகளிடையே உரசல் ஏதும் இல்லை என்றும், அரசை 5 ஆண்டுகளுக்கு நடத்துவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே