இந்த 5 பொருளை ஐஸ்கட்டியாக்கி கண்ணுக்கு பயன்படுத்தினா எப்பவுமே கருவளையம் வராது!

கண்ணுக்கு கொடுக்கும் அதிகபடியான வேலையை தாண்டி போதுமான சத்து இல்லாததாலும் கருவளையம் அதிகரிக்கிறது.
கருவளையம் அவ்வபோது வருவதும் மறைவதுமாக இருந்த காலம் எல்லாம் இப்போது இல்லை எப்போதும் நீங்காமல் பின் தொடர்கிறது. கருவளையம் வயது பேதமில்லாமல் இன்று சிறுவயதினரையும் தாக்கிவருகிறது. மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரை தாண்டி அதிக பளு கொடுப்பதாலும் கண்கள் வலிவிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் கருவளையமும் சேர்ந்துவிடும். இவையெல்லாம் தற்காலிகமாக இருந்தாலும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டல் தொடர்ந்து கண்களை சுற்றி படிந்துவிடுவதோடு கருமையையும் உண்டாக்கிவிடுகிறது. கண்களுக்கு கீழ் உண்டாகும் இந்த கருமையையும், இரப்பை வீக்கத்துக்கும் எளிதான பராமரிப்பு செய்தாலே அதை எளிதில் நீக்கமுடியும். ஐஸ்கட்டி கொண்டு செய்யும் ஒத்தடம் கண்களுக்கு புத்துணர்ச்சியையும் அழகையும் கொடுக்கும். வசீகரமான கண்களுக்கு உதவும் இந்த பொருள்களை குறித்து தெரிந்துகொள்வோம்.
கேரட்
கேரட் உடல் ஆரோக்கியத்தை அளிக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ட், பொட்டாசியம்,பீட்டா கரோட்டின், ஊட்ட சத்துகள் கொண்டிருக்கிறது. அதே போன்று இவை சருமத்துக்கும் பெரிதும் உதவுகிறது. முகம் இழந்த நிறத்தை மீட்டெடுப்பது முதல் முகத்தின் சுருக்கம் போக்கும் கேரட் கண்களின் கருவளையத்தையும் ஆரோக்கியமாக போக்குகிறது.
கேரட்டை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு வடிகட்டி எடுக்கவும். அதிகம் நீர் விட வேண்டாம். இதை ஐஸ் க்யூபில் ஊற்றி வைத்து ஐஸ்க்யூபாக மாறும் வரை வைத்திருந்து எடுத்து மெல்லிய துணி அல்லது அப்படியே கண்களை மூடி ஒற்றி எடுக்கவும். நான்கு நாளில் பலன் தெரியும். கண்களில் வசீகரம் கூடும்.

உருளைக்கிழங்கு
கருவளையத்துக்கு உருளைக்கிழங்கை வெட்டி கண்களின் மீது வைத்தால் போதும் என்று சொல்வதுண்டு. ஆனால் உருளைக்கிழங்கை சீவி கண்களின் மீது பேஸ்ட் போட்டாலும் கிடைக்காத பலன் உருளைக்கிழங்கு சாறை தடவும் போது கிடைக்கும். உருளைக்கிழங்கு சாறை அவ்வபோது தடவி வருவது சோம்பலாக இருக்கு என்பவர்கள், உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதில் கால்பங்கு நீர் கலந்து ஐஸ்க்யூபில் ஊற்றி வைக்கவும். பிறகு ஐஸ் கட்டி ஆனதும் எடுத்து கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கவும். இதனால் கண்களுக்கு வெகு நேரம் வரை உருளைக்கிழங்கு சாறு சத்து கிடைக்கும். இரண்டு முறைக்கு பிறகு நன்றாகவே பலன் கிடைக்கும்.

கற்றாழை
கற்றாழை இருந்தால் போதும் பியூட்டி பார்லர் பக்கம் போகவேண்டியதில்லை. கூந்தல் முதல் பாதம் வரை தேவையான பராமரிப்பு அனைத்துக்கும் இவை ஒன்றே போதுமானது. கற்றாழையை இரண்டாக வெட்டி முள்நீக்கி நீரில் போட்டு மஞ்சள் திரவம் வெளியேறியதும் அதன் உள் இருக்கும் நுங்கு பகுதியை எடுத்து மசித்து சாறு எடுக்கவும். அப்படியே சேர்த்தால் மஞ்சள் நிற பகுதி கண்களில் எரிச்சலை உண்டாக்கும். இந்த ஜெல்லுடன் பாதி அளவு நீர் சேர்த்து எலுமிச்சை ஒரு துளி சேர்த்துஐஸ்க்யூபில் ஊற்றி விடவும். பிறகு இந்த ஐஸ்க்யூபை கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். ஃப்ரெஷ்ஷான கற்றாழையை பயன்படுத்த வேண்டும்.

​தக்காளி
தக்காளி சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கண்களுக்கு பொலிவு தரக்கூடியது. தக்காளியை சுத்தமாக ஓடும் நீரில் அலசி மிக்ஸியில் மைய அரைத்து கூழாக்கவும். இதில் நீர் சேர்க்காமல் ஐஸ்க்யூபில் ஊற்றி அவை கட்டியானதும் எடுத்து முகத்துக்கும் கண்களுக்கும் ஒத்தடம் கொடுக்கலாம்.

தக்காளி முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும். சருமத்தை அழகுபடுத்துவது போன்று கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை போக்கி கருவளையம் இருந்த அடையாளத்தை நீக்கும். தினமும் இதை செய்துவந்தால் முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனையும் ஓடிவிடும்.

​வெள்ளரிக்காய்
கண்சோர்வு நீக்குவதில் முதலிடம் வெள்ளரிக்காய். அதனால் தான் வெள்ளரிக்காயை ஃபேஷியல் செய்யும் போது கண்களுக்கு வைக்கிறார்கள். கண்களின் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து, சாறை ஐஸ்ட்ரேயில் ஊற்றி ஐஸ்கட்டிகளாக்கவும்.
இதை முகம் முழுக்க கண்களின் மீது, கண்களுக்கு கீழ், கண்களை சுற்றி என எல்லா இடங்களிலும் வைத்து ஒற்றி எடுத்தால் கண்கள் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பதை பார்க்கலாம்.

இவை எல்லாம் வீட்டில் இருக்ககூடிய எளிய பொருள்களே. ஐஸ் க்யூபாக பயன்படுத்தும் போது கண்களுக்கு ஒத்தடம் கொடுத்த பிறகு முகத்துக்கும் மசாஜ் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவை தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். மொத்தத்தில் கண்களில் கருவளையம் இருக்கவே செய்யாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே