எல்லை அத்துமீறல் தொடர்ந்தால் சீனாவுடன் பெரிய மோதல் ஏற்படும் – பிபின் ராவத்

எல்லையில் அத்துமீறியதற்காக சீன ராணுவத்திற்கு, அந்த ராணுவமே எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கப்பட்டதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தேசிய ராணுவ கல்லூரி நடத்திய விழாவில் கலந்துகொண்டு பேசிய, பிபின் ராவத், இந்தியா வளர வளர பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் வளர்ந்துகொண்டே இருப்பதாகக் கூறினார்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு பெற வேண்டும் என பிபின் ராவத் வலியுறுத்தினார்.

ஆயுத தேவைகளை ஈடுகட்ட ஒரே நாட்டையே சார்ந்திருக்கும் நிலையிலிருந்து இந்தியா வெளிவர வேண்டும் என்றும் பிபின் ராவத் வலியுறுத்தினார்.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதாகக் கூறிய முப்படைகளின் தலைமை தளபதி, எல்லையில் அத்துமீறியதற்காக சீன ராணுவத்திற்கு அந்த ராணுவமே எதிர்பார்க்காத பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் அவர், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தின் பிறப்பிடமாக திகழ்வதாகவும் பிபின் ராவத் குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே