பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை தான் நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையொல் நேற்று 485 ஆக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 86 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 571 ஆக உயர்ந்துள்ளது.
இக்கொடிய வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச்லைட், மெழுகுவர்த்தி, அல்லது மொபைல் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பல்வேறு விதமான மீம்ஸ்களை உருவாக்கவும் தவறவில்லை.
இந்நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பன் பிரதமரின் வேண்டுகோளை நிராகரிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெல்வோம்” என்று கூறியுள்ளார்.