எனக்கு அந்த தைரியம் இல்லை: கங்கனா ரனாவத்தை பாராட்டிய பிரபல நடிகை.

வெளியாட்களை டார்கெட் செய்யும் பாலிவுட்காரர்கள் பற்றி பேசிய கங்கனா ரனாவத்தை பிரபல நடிகை சிமி கரேவால் பாராட்டியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தற்கொலை அல்ல கொலை. அவரை தற்கொலை செய்ய தூண்டிவிட்டுள்ளார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாலிவுட்காரர்களால் தான் பட்ட கஷ்டங்களையும் அவர் விவரித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சிமி கரேவால் சுஷாந்த் மற்றும் கங்கனா பற்றி கருத்து தெரிவித்துள்ளார். சிமி கரேவால் கூறியிருப்பதாவது,

பாலிவுட்டில் இருக்கும் வெளியாட்கள், சுஷாந்த் சிங் ராஜ்புட் பட்ட கஷ்டங்களை பற்றி அறிந்து நான் வேதனை அடைந்தேன். இந்த நிலை மாற வேண்டும். அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொலை செய்யப்பட்டபோது அங்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதே போன்று சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தால் பாலிவுட்டில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

பாலிவுட்டை சேர்ந்த அதிகாரம் படைத்த ஒருர் என் கெரியரை நாசமாக்க முயற்சி செய்தார். நான் அது பற்றி பேசாமல் அமைதியாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு தைரியம் இல்லை. என்னை விட தைரியமாக இருக்கும் கங்கனா ரனாவத்தை பாராட்டுகிறேன் என்றார்.

யார் வாரிசும் இல்லாமல் திறமையை மட்டும் நம்பி வருபவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிறார் சிமி கரேவால். பாலிவுட்டில் வாரிசுகளுக்கு தான் சலுகை, வெளியாட்கள் கஷ்டப்படுத்தப்படுவதாக கங்கனா ரனாவத் தொடர்ந்து கூறி வருகிறார்.
சினிமா பின்னணி இல்லாத சுஷாந்த் சிங் ராஜ்புட் சின்னத்திரையில் இருந்து பாலிவுட்டுக்கு வந்தார். தன் திறமையை மட்டும் நம்பி கடினமாக உழைத்து முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றார். பல வெற்றிப் படங்களை கொடுத்தும் தனக்கு பெரிய பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று கூறி வருத்தப்பட்டிருக்கிறார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

சுஷாந்த் நடித்த சிச்சோரே படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு கூட தன்னை தேடி பெரிய பட வாய்ப்புகள் வரவில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறார். கடந்த 6 மாதங்களில் 7 பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார் அவர். சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சுஷாந்தின் ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். வெளியாட்களை டார்கெட் செய்பவர்கள் குறித்து கங்கனா அளித்த பேட்டி பரபரப்பாகியுள்ளது.

சுஷாந்த் பற்றி கங்கனா கூறியதாவது,
சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி நான் கூறியவை பொய் என்று நிரூபிக்கப்பட்டால் என் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

சுஷாந்த் மன அழுத்தத்தில் இருக்கிறார், அவர் பர்வீன் பாபி போன்று ஆகிவிடுவார் என்று மகேஷ் பட் ரியா சக்ரபர்த்தியிடம் கூறியிருக்கிறார். மகேஷ் ஏன் சுஷாந்தின் தந்தையை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு மனநலம் சரியில்லை என்று கூறவில்லை?. ரியா எதற்காக மகேஷ் பட்டை அணுகினார்?. சுஷாந்த் விஷயத்தில் தலையிட மகேஷ் பட் யார்?. சுஷாந்த் வழக்கில் போலீசார் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் முக்கியமான அதிகாரம் படைத்தவர்களிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே