திருப்போரூர் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதயவர்மன் உள்பட 11 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
திருப்போரூர் நிலத்தகராறில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தி கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் சிலர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இதில், லட்சுமிபதி மற்றும் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.
இதன் பின்னர் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கி சுட்டுள்ளார்.
இதில், ரியல் எஸ்டேட் அதிபரும் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் கேளம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதயவர்மன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
இந்த விவகாரத்தில் எம்எல்ஏ இதயவர்மனை சென்னை மற்றும் செங்கல்பட்டு காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.