திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜ.,வில் இணைந்தார்.
‘முரசொலி’ அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார்.
இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இதனிடையே, தமிழக பா.ஜ., தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார்.
அவரை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனால், பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது.
‘டிவி’ ஒன்றுக்கு, துரைசாமி நேற்று (மே 21) அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார்’ என்ற கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது.
அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ”பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.,வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர்,” என்றார்.
இந்நிலையில், இன்று (மே 22) தமிழக பாஜ., தலைவர் முருகன் மற்றும் இல.கணேசன் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தார்.