லஞ்ச பணத்தை வாங்கி குவித்த பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவமானத்தில் அவர் கணவர் தற்கொலை..

அதிகளவு லஞ்ச பணத்தை வாங்கி குவித்த பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவமானத்தில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் வருவாய்த்துறையில் அதிகாரியாக உள்ளார். சுஜாதா மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் அவர் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக ரூ 30 லட்சம் அளவில் பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பொலிசார் சுஜாதாவை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் அவரின் கணவர் அஜய்குமாருக்கும் சம்மந்தம் இருக்கும் என கருதிய பொலிசார் அவரை சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையம் அழைத்து சென்றுவிசாரித்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நேற்று அஜய்குமார் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி கைதால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் அவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே