சீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு!!

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு.

மலைகளுக்கிடையே மிகவும் உறுதியாகவும் நீளமாகவும் சற்றே அகலமாகவும் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர், நன்கு படித்து கட்டுமானக் கலை அறிந்த எஞ்சினியர்களால் கட்டப்பட்டது இல்லை என்பது விசித்திர உண்மை. எங்கிருந்து பார்த்தாலும் இதன் நீண்ட அமைப்பு பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரிவது போல் எழுப்பப்பட்டிருக்கும் இந்தப் பெருஞ்சுவரின் வரலாறு சுவாரஸ்யமானது.

சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதொரு ரிப்பனைப் பிடித்ததுபோல் கட்டப்பட்ட இந்தப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்கிற பாதுகாப்பு நோக்கத்தில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு அதிசயம். உலகின் தனித்துவமான ஒரு கட்டுமான அதிசயமாகக் கருதப்படுகிறது இது. வாழ்நாளில் ஒருமுறையாவது இதை நேரில் கண்டு தரிசிக்க வேண்டும் என உலகெங்கிலுமிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவுக்கு வரும் உலகத் தலைவர்களுக்கு சீனா மிகுந்த பெருமிதத்துடன் இதைச் சுற்றிக் காட்டுகிறது. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தச் சுவர் ஒரேயடியாக நீளமாகவே கட்டப்படவில்லை. துண்டு துண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பிறகு மெதுவாக ஒன்று சேர்க்கப்பட்டன. ஆனால் கட்டிட வேலை மட்டும் நிற்கவே இல்லை. இந்தப் பெருஞ்சுவரின் நீளம் 2,500 கி.மீ.யிலிருந்து 7500 கி.மீ வரை இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் தற்போது 21,190 கிலோமீட்டர் நீளம் உள்ளது என புதிய தகவல்கள் சொல்கின்றன. ஆனால் இதுவும் இன்னும் இறுதியானதாகக் குறிப்பிடப்படவில்லை. கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருக்கும் ஷாஸ்கால்குயான் என்னும் இடத்தில் இருந்து தக்லாம்கான் பாலைவன ஓரம் வரை இந்தச் சுவர் நீண்டு கிடக்கிறது. சீனப் பெருஞ்சுவர் மிக நீளமானது மட்டுமல்ல, மிகவும் பழமையானதும் கூட. அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது இச்சுவர். ஆனால் இந்தச் சுவர் பயத்தின் காரணமாகவே எழுந்தது.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயினர். அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார்.

சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி ‘முதல் பேரரசர்’ என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் ‘பியூடல் சிஸ்டம்’ எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார்.

ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி.

பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார். இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி.

கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் ‘கன்பூசியஸ் சித்தாந்தம்’ உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி. சின்னச் சின்ன நாடுகளாக சிதறிக் கிடந்த சீனாவின் பல பகுதிகளை ஒன்றிணைத்து அனைத்துப் பகுதிகளுக்கும் தனது நாட்டின் பெயரான சின் என்பதையே சூட்டினான். இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட புதிய அரசு சின் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டாலும் நாளடைவில் அந்த பெயர் சீனா என்று அழைக்கப்பட்டது.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள்.

ஒவ்வொரு அரசரும் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுவர்களை எழுப்பினார்கள். எனவே, தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு துண்டுப் பகுதிகளாகவே இந்தப் பெருஞ்சுவர் ஆரம்ப காலத்தில் இருந்தது. இறுக்கப்பட்ட மண் மற்றும் சரளைக்கற்களால் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த பெருஞ்சுவர் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இல்லை. வால், ஈட்டி போன்ற ஆயுதங்களின் தாக்குதல்களை மட்டும் தாக்குப்பிடிக்கக் கூடியதாகவே அந்தச் சுவர்கள் இருந்தன.

அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமர்சையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

சீனப் பெருஞ்சுவரின் நீளத்தை வைத்தே, எத்தனை பேர் எவ்வளவு கடின உழைப்பைக் கொட்டி இந்தப் பெருஞ்சுவரை உருவாக்கியிருப்பார்கள் என்று ஊகிக்க முடியும். பல நூற்றாண்டுகள் தாண்டி சீனப்பெருஞ்சுவர் கம்பீரமாக நின்றிருப்பதே இதன் வலிமைக்குச் சான்று!

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே