இமாசலப்பிரதேசத்தில் பெய்து வரும் பனிமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் இமாசலப்பிரதேசம் ஷிம்லாவில், நேற்று நள்ளிரவு முதல் பனிமழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலா வந்திருக்கும் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில் ஷிம்லாவில் இன்றும் பனிமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், ஷிம்லா, கின்னௌர், லஹௌல்-ஸ்பிடி மற்றும் சம்பா, கங்கா, மண்டி ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பனிமழை பெய்யும் என்று ஷிம்லாவின் வானிலை ஆய்வு இயக்குநர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட ஷிம்லா சென்றிருக்கும் சுற்றுலாப் பயணிகள், பனிமழையில் விளையாடி மகிழ்ந்தனர். 

பலரும் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பனிமழையை நேரில் பார்ப்பதாக உற்சாகத்தோடு கூறியுள்ளனர்.

இந்த குளிர் காலத்தின் முதல் பனி மழை என்பதால், சுற்றுலாவை நம்பியிருக்கும் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள், வெள்ளை பனித்துகள்களால் மூடப்பட்டு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே