சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய, நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தந்து ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி. கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த தோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன. ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.
எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக (Cool) வலம் வரும் தோனி, ஓய்வு அறிவிப்பையும் எந்த முன் அறிவிப்பும்,எந்த படோபடமும் இன்றி மிக சாதாரணமாக அறிவித்துவிட்டார். தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்த பதிவுகள், உங்களை கிரிக்கெட் களத்தில் மிஸ் செய்கிறோம் என பல அடுக்கடுக்கான பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், சமூக வலைத்தளங்களில் தோனியின் ஆக்கிரமிப்பு நேற்று இரவு தற்போது வரை உள்ளது. மேலும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிறகு பல்வேறு பிரபலங்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தற்போது ட்வீட் வெளியாகியுள்ளது.