தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடைகள், பெட்ரோல் பங்க்கள், உணவகங்கள் ஆகியவை திறந்திருப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்திலும் பொதுப்போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை.

காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர பிற கடைகள் திறக்கப்பட வில்லை.

தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்புகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்துக்குச் செல்லும் நிலையில் மக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி விட வேண்டும்.

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளா்களுக்கு முறையாக பாதுகாப்பு போன்ற பணிகளை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் போன்ற ஊா்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மட்டும் நாள் முழுவதும் தொடா்ந்து செயல்படும்.

அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள், உணவகங்கள் (பாா்சல் மட்டும்) ஆகியன நாள் முழுவதும் எப்போதும் போன்று இயங்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே