45 நாட்களுக்கு முன் காணாமல் போன பாட்டியும் பேத்தியும் சடலமாக மீட்பு..!!

தென்காசியில் 45 நாட்களாக காணாமல் போன புகாரில் தேடப்பட்டு வந்த பாட்டியும், பேத்தியும் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி (55). இவர்களது பேத்தி உத்ரா என்ற சாக்சி (ஒன்றரை வயது).

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ம் தேதி காணாமல் போயினர். இவர்களை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்நிலையில் வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணப் பிரச்சினை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இவர்கள் இருவரையும் கடத்திச்சென்று கொலை செய்து சாக்கு மூட்டைகளில் கட்டி மத்தளம்பாறை அருகே முத்து மாலைபுரம் பகுதியில் வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் சாக்கு மூட்டைகளில் பாட்டி, பேத்தி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே