என்னை சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு – நடிகை கங்கனா ரனாவத் ட்வீட்..!!

நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில், மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு நடிகை கங்கனா அண்மையில் விமா்சனம் செய்தாா்.

அதன் காரணமாக அவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

மும்பை வந்த கங்கனாவுக்கு, உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசு சாா்பில் ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கங்கனா மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி ஆகியோரின் ட்விட்டர் பதிவுகள் வகுப்புவாதத்தைத் தூண்டுவதாக அமைந்திருப்பதாகக் கூறி பாலிவுட் உடற்பயிற்சியாளா் முனாவா் அலி சையது என்பவா் பாந்த்ரா மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கங்கனா மற்றும் அவருடைய சகோதரி மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆா்) பதிவு செய்து, இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு தொடா்பாக வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் ‘பப்பு சேனை’ என்று கங்கனா குறிப்பிட்டாா்.

கங்கனாவின் இந்த விமா்சனம், நீதித் துறைக்கு எதிரானது என்று கூறி வழக்குரைஞா் அலி காசிஃப் கான் தேஷ்முக் என்பவா், அந்தேரி நீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு வரும் நவம்பா் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் கங்கனா கூறியதாவது:

சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றோரை நான் வணங்குகிறேன்.

என்னையும் சிறையில் அடைக்கப் பார்க்கிறது (மஹாராஷ்டிர) அரசு.

இது என்னுடைய தேர்வுகள் சரியானவை என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

விரைவில் சிறைக்குச் சென்று என்னுடைய தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை நானும் அனுபவிக்கக் காத்திருக்கிறேன். என் வாழ்க்கைக்கு அது அர்த்தம் தரும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே