திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சமூகநீதிக்கும், ஜனநாயகத்தின் மகேசர்களான வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புகளுக்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் பெரும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாரக தமிழக ஆளுநரை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவராக நான் வலியுறுத்துவேன்.

தொடர்ந்து கேள்வி கேட்பேன் என்பதை இங்கே உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

நீட் தேர்வு மாணவர்களுக்கு பலி பீடமாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த பலி பீடத்தை, அதாவது நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே