விஷம் கொடுத்து குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு..!!

தொடர்ந்து 10 நாள்களாக மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரூ தியாகதேனாஹல்லி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஷர்மிளாகுமாரி (எ) ஷைலஜாகுமாரி (39).

கரோனா பொது முடக்கத்தால் தொழில் பாதிப்படைந்ததையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி தனது 5 வயது மகள் கியாராவை பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்து வந்தார்.

பிறகு, மகள் கியாராவுக்கு சளி மருந்து கொடுத்த ஷைலஜாகுமாரி அவிநாசியை அடுத்த சேவூரில் தண்டுக்காரம்பாளையம்-புளியம்பட்டி சாலையிலுள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு மையத்தில் மகளைப் படுக்க வைத்து விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து மயக்க நிலையிலிருந்த கியாரா, மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் கண்விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருந்து வந்ததால், கடந்த இரு நாள்களுக்கு முன் தீவிர சிகிச்சைக்காக அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் திங்கள்கிழமை மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது தாய் ஷைலஜாகுமாரி கோவை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி கியாரா உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே