தமிழில் ட்விட் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்..!!

பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி அரசின் தமிழ் அகாடமி அமைக்கும் முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்’ என குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்

டெல்லி துணை முதல்வரும், கலை, கலாசார மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிஷோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும்.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும்.

தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே