டில்லியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு (மே 31 வரை) நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டில்லியில், அதிகரித்து வந்த கொரோனா பரவலால், கடந்த ஏப்.,19ம் தேதி ஆறு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.
இதனால், அங்கு ஒவ்வொரு வாரமாக ஊரடங்கை நீட்டித்து வந்தார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போதைய ஊரடங்கு, நாளையுடன் (மே 24) நிறைவடைய இருந்தது. இந்நிலையில், ஊரடங்கினை மேலும் ஒரு வார காலத்திற்கு (மே 31) வரை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்படுவோர் விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது.
டில்லியில் வரும் மே 31ம் தேதி காலை 5 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தால், மே 31க்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும்,’ எனக் கூறினார்.