தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள், பழ கடைகள், பூ கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திர எல்லை மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தையாகவும், காய்கறி, பழம், மலர் சந்தையின் முக்கியச் சந்தையாகவும் கோயம்பேடு காய்கனி அங்காடி விளங்கியது.
பல ஏக்கர் பரப்பளவில் மூன்று சந்தைகளும், அருகிலேயே வெளியூர் செல்லும் பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்த வசதி எனத் திகழும் பிரம்மாண்டமான கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பிடியில் இருந்து தப்பவில்லை.
இதனால் மார்க்கெட்டை 3 ஆக பிரித்து வேறு இடங்களில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கனி அங்காடியை மூடி மாதக்கணக்கில் ஆகியும் அரசு திறக்காமல் இருப்பதால், உடனடியாக திறக்க வேண்டும் என்றும்,
திருமழிசை அங்காடியில் வசதி குறைவாக உள்ளதாலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் முடிவில் ஆக.10ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.