குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றார்.
அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, ” மருத்துவமனையில் கோவிட் பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் ” என பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் பிரணாப் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.