டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான். அவருக்கு வயது 73. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் அமைச்சராக உள்ளார்.
ஜூலை 12ம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, லக்னோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
செயற்கை சுவாச கருவிகளுடன் சுவாசித்து வந்தார். இந் நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியவர் சேத்தன் சவுகான். சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியவர். மகாராஷ்டிரா, டெல்லி அணிகளுக்காக ரஞ்சி தொடர்களிலும் விளையாடியவர்.