அதிமுக முன்னாள் எம்.பி. விழுப்புரம் லட்சுமணன் இன்று திமுகவில் இணைய உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்காக களப் பணிகளில் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதேபோல் தேர்தல் என்றாலே வழக்கமாக அரங்கேறும் கட்சி தாவல்களும் நடந்து வருகின்றன. திமுகவில் இருந்து விபிதுரைசாமி, கு.க.செல்வம் எம்.எல்.ஏ. பாஜகவுக்கு தாவி உள்ளனர்.
சிட்டிங் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சி தாவியது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் திமுகவுக்கு தாவினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. லட்சுமணன் இன்று திமுகவில் இணைய உள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் லட்சுமணன்.
பின்னர் விழுப்புரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்தார்.
அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. இதில் லட்சுமணன் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்.
இதனால் தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய லட்சுமணன் முடிவு செய்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார் லட்சுமணன்.