கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அண்மையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு இந்த முடிவை எடுத்தது.
இதனடிப்படையில் இன்று புதுச்சேரி முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் நாளை காலை 6 மணிவரை அமலில் இருக்கும். பால் வழங்கும் நிலையங்கள், மருந்து கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் முழு லாக்டவுன் காலம் என்பதால் மூடப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள், வங்கிகள் எதுவும் இயங்கவில்லை. அனைத்து இடங்களிலும் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
முழு லாக்டவுன் காலத்தில் வெளியில் பொதுமக்கள் நடமாடுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.