பெண்களின் பாதுகாப்பிற்காக “காவலன் செயலி”…!

பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் “காவலன் SOS” எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், செயலியில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும் அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும்.

அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும்.

செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும்.

செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.

செயலியின் REGISTRATION பக்கத்தில் பெயர், செல்போன் எண்ணை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் முகவரி, மின்னஞ்சல் முகவரி பதிவு செய்தால் போதும் காவலன் செயலி பயன்படுத்த தயாராகி விடும்.

பெண்களின் அவசர உதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை, விளையாட்டுத்தனமாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே