உரத்தட்டுப்பாடு – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்..!!

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா விலை திடீரென அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் பயிர்கள் வளர்ந்து வரும் நேரம் இது. இந்நேரத்தில் உரத் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது. இதனால் டெல்டா விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

”காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாட்டைச் சரி செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைப்பதும் அவசியம்.

பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் உரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடையச் செய்திருக்கிறது. இந்தக் கவலையைப் போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே