மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகையில், டிசம்பர் 9ம் தேதி அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாகவும்; முன்னதாக விவசாய சங்க பிரதிநிதிகள், எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு விவசாய சங்கப் பிரதிநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, 9ம் தேதி அரசு சார்பில் எங்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்படும் என்றும்; முன்னதாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தையின்போது எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் கூட, டிசம்பர் 8ம் தேதி நாங்கள் அழைப்பு விடுத்தபடி, பாரத் பந்த், நடைபெறும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே