திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ரூ.495 கோடி செலவில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும்; திருச்சியில் தொழில் தொடங்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும்; திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைவாக இருப்பதாகவும்; தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி முடிவெடுக்கப்படும் கூறினார்.
இதனையடுத்து, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும்; மருத்துவத்துறை சார்ந்த ஆலோசனைக்கு அனைத்து கட்சி கூட்டம் தேவை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; ஒரு மாதத்திற்கு ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று நிதித்துறைச் செயலர் கூறியதாகவும் கூறினார்.