ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அமலாக்கத்துறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மேலும், ஒரு நாள் காவலை நீட்டித்து தருமாறு, அமலாக்கத்துறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 13ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனக்கு அடிவயிறு வலி கடுமையாக இருப்பதால், ஹைதராபாத்திலுள்ள தனது மருத்துவர் நாகேஷ்வர் ரெட்டியிடம் சிகிச்சை பெறுவதற்காக நவம்பர் 4 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு, உரிய விசாரணை அமர்வில், வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
ஏற்கனவே அமாலக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வருகிற 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.