ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்த கல்லூரி மாணவர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் பகுதியைந் சேர்ந்தவர் நித்திஷ் குமார் (20). இவர் காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

இவரது தந்தை அமைந்தகரையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

கொரோனா காலத்தில் கல்லூரி விடுமுறை என்பதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் நித்திஷ் குமார்.

நித்திஷ் குமாருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக நாட்டம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காஸ்ட்ரோ கிளப் என்ற ஆன்லைன் சூதாட்ட தளத்தில் பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து பறிகொடுத்துள்ளார்.

தான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் பறிகொடுத்ததால், ஆதை மீட்பதற்காக தான் பணிபுரிந்த கடையில் இருந்தும் ரூபாய் 20 ஆயிரம் எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதையும் பறிகொடுத்துள்ளார்.

மொத்த பணத்தையும் நித்திஷ் குமார் இழந்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்திஷ் குமார் நேற்றிரவு பணிபுரிவதாக கூறிவிட்டு டாட்டூ கடையில் தங்கி அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டாட்டூ கடை உரிமையாளர்கள் இன்று காலை வந்து பார்க்கும்போது நித்திஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அமைந்தகரை போலிஸாசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பிரேதத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அறையை சோதனை செய்தபோது நித்திஷ் குமார் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், தான் ஆன்லைன் விளையாட்டில் முதலீடு செய்து 40 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துவிட்டதாகவும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் நித்திஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே