கோவையில் ரயில் மோதி காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயத்துடன் உயிருக்கு போராடி வந்த ஆண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை கிராமங்கள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

இங்குள்ள யானைகள், வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் இரண்டு ரயில்வே தண்டவாளங்களை கடந்து நீர் அருந்த செல்லும்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் யானை கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த ரயில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மீது மோதியதில், தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே படுத்து உள்ளது. 

இது குறித்து ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து கால்நடை மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் காயம்பட்ட யானைக்கு வலி நிவாரணி மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனத்துறையின் முதல்கட்ட விசாரணையில் கேரளாவில் இருந்து வந்த திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை காயமடைந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காயம்பட்ட யானைக்கு அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சிகிச்சையை துவங்கிய நிலையில், மேல் சிகிச்சைக்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு காயம்பட்ட யானை அழைத்து செல்லப்பட்டது.

ரயில் இருப்புப்பாதை அப்பகுதியில் மிகவும் வளைவாக அமைந்திருக்கும் என்றும், அச்சமயம் கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வளைவான பகுதியில் வரும் போது யானையும் தண்டவாளத்தில் ஏறிய நிலையில், அப்போது யானையின் மீது ரயில் மோதியதாக வனத்துறையினர் கூறினர்.

ஒரு 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பின் யானை தண்டவாளத்தில் இருந்து 5-10 மீட்டர் தூரம் கீழே இறங்கி படுத்து விட்டது.

யானையின் இடுப்பு பகுதி மிகவும் அடிபட்டு இருப்பதாகவும், முன்னங்கால்கள் நன்றாக அசைவதாகவும், பின்னங்கால்கள் அசைக்க முடியவில்லை என்றும்; வால் பகுதியில் உணர்ச்சி இல்லை என்றும், இடது தந்தம் உடைந்து நொறுங்கி விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, இரு நாட்கள் முகாமில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே