இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மனித உரிமை மீறலாகாதா? என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் 4 வாரங்களில் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இ-பாஸ் முறையை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்த பிறகும் தமிழக அரசு தொடர்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கூலித்தொழிலாளர் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் போடப்பட்ட நிலையில் இ-பாஸ் முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த நடைமுறையை கைவிட்ட போதிலும் தமிழக அரசு கைவிடவில்லை.
அதேபோல, பொது போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. தற்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.