கடந்த மாதம் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. கூடவே சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

அப்போதிருந்தே எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தங்களை ஏமாற்றியதாக சீர்மரபினர் நலச் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கினர்.

தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி மக்களிடம் அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இச்சூழலில் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கையில் கறுப்புக்கொடி ஏந்தி வீதி வீதியாக அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

உச்சக்கட்டமாக பொதுமக்களின் காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர் சீர்மரபினரைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் இப்படிச் செய்வதற்கான காரணம் என்ன? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

1978ஆம் ஆண்டுக்கு முன்பைப் போல தமிழகத்திலுள்ள 68 சமுதாய மக்களைப் பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க வேண்டும் என்று சீர்மரபினர் நலச்சங்கத்திடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் அரசு தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இச்சூழலில் 2019ஆம் ஆண்டு DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபினர் சமூகத்தினர் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை கடுமையாக எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தது.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் கண் துடைப்புக்காக உள் இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்பதே அவர்களின் கோபத்திற்கான காரணமாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே