நீங்களாக எதுவும் யோசிக்காதீர்கள்: சமூக ஊடகங்களிலிருந்து விலகியது குறித்து ஆமிர் கான்

தான் ஏன் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற முடிவெடுத்தேன் என்பது குறித்து யாரும் சொந்தமாக எதுவும் கற்பனை செய்ய வேண்டாம் என்று நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்

56 வயதான ஆமிர் கான், சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார். மேலும், தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட் அனைத்தும் இனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இனி ஆமிர் கான் திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்கிற ரீதியில் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் ஆமிர் கான் பங்கேற்றார். அப்போது இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “உங்கள் கற்பனைகளை அதில் சேர்க்காதீர்கள். நான் எனக்கான உலகத்தில் வாழ்கிறேன். எப்படியும் நான் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்குவதில்லை. எதுவும் பதிவிடுவதில்லை.

ஏன் சமூக ஊடகங்களின் அறிமுகத்துக்கு முன்பும் என் ரசிகர்களிடம் பேசியிருக்கிறேன். இப்போது சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிதால் இனி ஊடகங்கள் வழியாக மட்டுமே என்னால் பேச முடியும். எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று பதிலளித்தார்.

‘கோய் ஜானே நா’ என்கிற திரைப்படத்தின் நிகழ்ச்சியில்தான் ஆமிர் கான் இவ்வாறு பேசியுள்ளார். இதில் அவர் கவுரவ வேடத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் ஏப்ரல் 2 அன்று வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே