தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி, அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி எம்.பி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் சென்றனர்.

அப்போது ஆளுநரிரடம் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை மு.க. ஸ்டாலின் நேரில் அளித்தார்.

ஊழல் பட்டியலை சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் கொடுத்துள்ள தமிழ்நாடு அமைச்சரவை மீதான ஊழல் பட்டியலின் சுருக்கம்:

1. முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.

2. துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.

3. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.

4. மின்வாரியத்துறை அமைச்சர் திரு பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் திரு சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

8. மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

முதற்கட்டமாக முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து – மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனு அளித்தப்பின்னர் வெளியே வந்தப்போது மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஏற்கனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே