முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரிசி அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது.
கொரோனா பரவல் அதிகமானதையடுத்து சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 19ந்தேதி அமலான முழு ஊரடங்கு வரும் 30ந்தேதி வரை நீடிக்கிறது.
முழு ஊரடங்கால் ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உதவியை வீடுகளுக்கேச் சென்று வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி வீடுகளுக்கேச் சென்று நிதி உதவி வழங்குவது இன்று தொடங்கியது. சென்னையில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவியை வழங்கினர்.