தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி இந்திய மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது – தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்

சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியவர் என தோனியைப் புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.

டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள்.

ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார் தோனி.

இந்நிலையில் தோனியைப் புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. இதை மிக மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தோனி பகிர்ந்துள்ளார்.

கலைஞன், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் என அனைவரும் தங்களுடைய கடின உழைப்பும் தியாகமும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுவதை எதிர்பார்ப்பார்கள்.

பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று ட்வீட் வெளியிட்டுள்ளார் தோனி.

பாராட்டுக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

உங்களுடைய பாணியில் ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டீர்கள் தோனி. உங்களுடைய ஓய்வு முடிவு 130 கோடி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

15 ஆண்டுகளில் இந்திய அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளீர்கள். 2011 உலகக் கோப்பையை முடித்த விதம் மக்கள் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும். இளைஞர்களைக் கொண்டு 2007 டி20 உலகக் கோப்பையை வென்றீர்கள்.

சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியுள்ளீர்கள். ராணுவத்தில் கெளரவமான பதவியில் பணியாற்றியபோது மகிழ்ச்சியுடன் இருந்தீர்கள். வெற்றியோ தோல்வியோ அனைத்து நேரத்திலும் அமைதியைக் கடைப்பிடித்தீர்கள்.

இனிமேல் சாக்‌ஷியும் ஜிவாவும் உங்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களுடைய தியாகமும் ஆதரவும் இல்லாமல் எதுவும் சாத்தியமாகியிருக்காது. உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே