டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தார்.
10,000 படுக்கை வசதிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கோவிட் சிகிச்சை மையமாகும் இது.
ராதா சோமி சத் சங்கத்தில் இதனைத் திறந்து வைத்தார் அனில் பைஜல். டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்த கரோனா வைரஸ் சிகிச்சை மையம் உள்ளது.
இதில் மிதமான மற்றும் கரோனா நோய்க்குறிகுணங்கள் இல்லாத நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். முதலில் 1000 நோயாளிகள் இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.
நோய்க்குறி குணங்கள் இல்லை ஆனால் கரோனா தொற்று உள்ள, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்களுக்கும் இந்த மையம் சிகிச்சை வழங்கவுள்ளது.
இந்த மையம் 1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்ட்து. சுமார் 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது. 200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு நிர்வாக ஆதரவு அளிக்கவுள்ளது, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் இந்த மையத்தை நடத்தும் முகமையாகும்.
சமயப் பிரிவான ராதா சோமி பியாஸ் செயல்பாட்டாளர்கள் இந்த மையத்தை நடத்த உதவுவார்கள்.
மேலும் இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மனப்பயிற்சி அளிக்கும் நல்ல மன நல நிபுணர்கள் இருப்பதாகவும், இந்தச் சோதனைக் காலக்கட்டத்தில் நோயாளிகளின் நல்லுணர்வுகளை பேணுவதற்காக விளையாட்டு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்றார் ஆளுநர் பைஜல்.
டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒருலட்சத்தை நெருங்கி வருகிறது. 68,256 பேர் குணமடைந்துள்ளனர், 25,940 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.