போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!!

டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டக் களத்திற்கு அர்விந்த் கேஜ்ரிவால் சென்று விவசாயிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

டெல்லி-ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கான ஏற்பாடுகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஆய்வு செய்தார்.

கேஜ்ரிவால் காலை 10 மணிக்குப் பிறகு தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் டெல்லி அருகே உள்ள சிங்கு எல்லைக்கு சென்றார்..

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலிருந்து 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் கூடியிருந்த சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் அமைதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

காசிப்பூர் எல்லையில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் உத்தரபிரதேச விவசாயிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் புதன் கிழமை திட்டமிடப்பட்டுள்ள ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடைசியாக நடைபெற்ற 5-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் நாளை டிசம்பர் 8-க்கு நாடு தழுவிய பாரத் பந்த்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவிததுள்ளன.

பாரத் பந்துக்கு ஆம் ஆத்மி கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தனது ஆதரவை வழங்கிய ஒரு நாள் கழித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

கேஜ்ரிவால் இன்று காலை 10 மணி அளவில் விவசாயிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றார். அங்கு விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

விவசாயிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது:

“நான் ஏற்பாடுகளைச் சரிபார்த்தேன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

அவர்களின் பிரச்சினையும் கோரிக்கைகளும் முக்கியமானவையாகும். நானும் எனது கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடன் துணை நிற்கிறோம்.

அவர்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கியபோது, டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களை சிறைகளாக மாற்ற எனக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டது;

ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவு விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்தது.

எங்கள் கட்சி, எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் விவசாயிகளுக்கு உரிய சேவைகளை வழங்கி வருகின்றனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஆனால் ஒரு சேவகனாகத்தான் வந்துள்ளேன்.

விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர், நாங்கள் அவர்களுடன்தான் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த்தை ஆதரிக்கிறது எங்கள் கட்சித் தொண்டர்களும் இதில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே