கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த காவலர்… காலில் விழுந்து பாராட்டிய வாகன ஓட்டி…

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாட வேண்டாம் என சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் அவரை பாராட்டி வாகன ஒட்டி ஒருவர் அவரது காலில் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அண்ணா சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான ரஷிக் என்பவர் வெளியே யாரும் நடமாட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு வாகன ஓட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதனை பார்த்த வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து காவலரின் செயலை பாராட்டி அவரது காலில் விழுந்தார்.

சமூக விலகலை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் அத்தியாவசிய பணிக்காக செல்வதாக கூறுவோரிடம் முகக்கவசம் அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே