எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் செய்தியில், தமிழ்ப் பேராசிரியரும், தமிழிலக்கிய சிந்தனையாளருமான திரு. கோவை ஞானி அவர்கள் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு நான் மிகுந்த துயரத்திற்குள்ளானேன்.
அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்ற அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பேராசிரியராகத் தொண்டாற்றியவர்.
தமிழ்மொழியை தன் உயிர் மூச்சாகக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்களை எழுதிய அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ் இலக்கிய சிந்தனையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.