இந்தியாவின் நிழல் உலக தாதாவும் தேடப்படும் குற்றவாளியுமான தாவூத் இப்ராஹிமுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் டோங்கிரி பகுதியில் காவலருக்கு மகனாக பிறந்த தாவூத் இப்ராஹிம், பின்னாளில் கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் மூலம் தாதாவாக உருவெடுத்தார்.
மேலும் வெடி பொருட்கள் கடத்தல், பாலிவுட் நடிகர்களை மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இவர் மீது உள்ளன.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக தாவுத் இப்ராஹிம் உள்ளார்.
இதனை அடுத்து மத்திய அரசு தாவூத் இப்ராஹிம்மை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிய தாவூத் இப்ராஹிம் அங்கிருந்து பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவரது மனைவி சூபினா செரினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரின் வீட்டுக்காவலர்கள் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இன் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.