தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவரும் நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கோவில்பட்டி , விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார், கழுகுமலை, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் எட்டயபுரம் அருகே கண்மாய் நிரம்பி உபரி தண்னீர் கீழ ஈரால் மற்றும் மேல ஈரால் கிராமங்களில் புகுந்தது. அங்கு 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
எட்டையாபுரம் தாசில்தார் அழகர் நேரில் பார்வையிட்டு மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இரு ஊரையும் இணைக்கும் வகையில் பாலம் மற்றும் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் ஆண்டிபட்டி அருகே கண்மாய் நிரம்பி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏத்தக்கோவில், மறவ பட்டி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் வெள்ளம் தேங்கி பொதுமக்கள், மற்றும் மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தண்ணீர் தேங்காதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.