தமிழகத்தில் மீண்டும் 1000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் 5 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,62,374 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகப்படியாக 395 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 107, செங்கல்பட்டில் 103, திருவள்ளூரில் 56, காஞ்சிபுரத்தில் 30, திருப்பூரில் 22 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் 5 பேர் உட்பட மாநிலம் முழுவதும்  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8,43,999 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 63,191 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று 71,888 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே