டவ்-தே புயல் : 21 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

கடந்த மாதம் 13 ஆம் தேதி, டவ் தே புயல் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்கள் காணாமல் போனதாக தகவல் பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் துணை பெயர் கொண்ட படகு, இலட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலிருந்த 9 மீனவர் காணாமல் போய் விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மீட்புப்பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் “விக்ரம்” மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சபிஷ், என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு 05.05.2021 அன்று 16 மீனவர்களுடன் பைபோர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. காணாமல் போன 21 மீனவர்களை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

‘டவ் தே’ புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர்களும் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதாலும் காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் கப்பல் மூலம் தொடர்ந்து தேடப்பட்டும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளதால், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே