நிவர் புயல் பாதிப்பு – கடலூரில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு..!!

தமிழகத்தில் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், புயல் மற்றும் வெள்ள சேதத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தென்மேற்க வங்கக் கடலில் உருவாகி நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த அதிதீவிர நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்கமாக பிற்பகலில் சென்றடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் மற்றும் வேளாண் துறை செயலர் உள்ளிட்டோரும் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே