அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.19) வெளியிட்டுள்ள தகவல்:

“தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

20.11.2020, 21.11.2020 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலான வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (செ.மீ.):

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் – 12, நீலகிரி மாவட்டம் குன்னூர் – 9, தேனி மாவட்டம் கூடலூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தலா 8.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

19.11.2020: கேரள கடற்பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

20.11.2020, 21.11.2020: தெற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கும் 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

22.11.2020: தென்மேற்கு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

23.11.2020: தென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய ஓமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீடக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே