கன்னியாகுமரியில் தொடரும் மழை..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கோதையாற்றில் பாயும் வெள்ளம், திற்பரப்பு அருவியை முற்றிலும் மூழ்கடித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

நாகர்கோவில் மாநகரின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கடல் அணை, ஒரே நாளில் பத்து அடி உயர்ந்து, முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதனிடேய, மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளதால், விடிய விடிய மின்சாரம் இல்லாமல் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே