ரிசர்வ் வங்கி தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை உயர்த்தி அறிவித்திருப்பதன் மூலம் இனி தங்க நகைக்கு கூடுதல் தொகையை கடனாகப் பெற வழிவகைக் காணப்பட்டுள்ளது.
அதாவது, வேளாண் துறை சாராத பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தங்கத்துக்கு நிகரான கடன் தொகையை 75% ல் இருந்து 90% ஆக உயர்த்தியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை பொது மக்களும், தொழில்முனைவோரும் எதிர்கொள்ள வசதியாக, வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு கடன் பெறுவோருக்கான தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை 75%ல் இருந்து 90% ஆக உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வு 2021ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு, ஒரு தங்க நகை மற்றும் தங்க ஆபரணங்களின் மதிப்பில் 75% மிகாமல் கடன் வழங்க வேண்டும் என்பதே ஆர்பிஐயின் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லாமல் நிர்ணயித்து அறிவித்த ஆர்பிஐ, கரோனா பேரிடர் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.