100 ரூபாய் லஞ்சம் தரமறுத்த சிறுவனின் முட்டை கடையை மாநகராட்சி அதிகாரிகள் தலைகுப்புற கவிழ்த்து அனைத்து முட்டைகளையும் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 14 வயது சிறுவன் ஒருவன் சாலை ஓரத்தில் தள்ளுவண்டியில் வைத்து முட்டை வியாபாரம் செய்துள்ளான்.
அப்போது அங்குவந்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் இல்லையெனில் 100 ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது.
இப்போதுதான் கடை போட்டேன், தன்னிடம் பணம் இல்லை என சிறுவன் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. அப்படி இருந்தும் அவர்கள் விடாமல் சிறுவனிடம் 100 ரூபாய் பணம் தராவிட்டால் நாளையில் இருந்து இங்கு கடை போடமுடியாது என கூறியுள்ளனர்.
இப்படியே வாக்குவாதம் சென்றநிலையில் அதிகாரிகள் சிறுவனின் முட்டைவண்டியை கீழே தள்ளி அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த சிறுவன் அதிகாரிகளை பார்த்து திட்டும் காட்சிகளும், முட்டைக்கட்டை உடைந்து சாலையில் ஓடும் காட்சிகளும் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகிவருகிறது.